Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் - தேர்தல் நன்னடத்தை விதிகளை உடனே தளர்த்துங்கள் : அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் கூட்டாக புதுவை தேர்தல் ஆணையரிடம் மனு

உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நலத்திட்டங் களை செயல்படுத்த வேண்டியுள் ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை தளர்த்தக்கோரி அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர். அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் நின்றபடி தந்த மனுவை இருக்கையில் அமர்ந்தபடி ஆணையர் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 22-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து முதல்கட்ட வேட்புமனு தாக்கலான 30-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. குளறுபடிகளை சரிசெய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடை ரத்து செய்து கடந்த வெள்ளிக்கிழமை 2வது முறையாக தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநர் தமிழிசையை சந்தித்து புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டமும் நடத்தினர்.

திமுக மாநில அமைப்பாளர் சிவா, இடஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 21-ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.

தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வர இன்னும் 10 நாட்கள் உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தொடருமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தாமல் தொடர் மவுனத்தில் இருந்தது.

இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் நேற்று காலை கூடி ஆலோசித்தனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் ஆகியோர் பேசினர். அதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸை சந்தித்தனர்.

அப்போது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாததால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தக்கோரி ஆணையரிடம் கடிதம் அளித்தனர் இருக்கையில் ஆணையர் அமர்ந்திருக்க, அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று மனுவை அளித்தனர். மனுவை வாசித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஆலோசித்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அதை கடிதம் வாயிலாக தரக்கோரினர்.அதை தருவதாகவும் ராய் பி தாமஸ் தெரிவித்தார்.

இதுபற்றி எம்எல்ஏக்கள் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை திரும்ப பெற தேர்தல் ஆணையரிடம் கோரியுள்ளோம். நன்னடத்தை விதிகள் தொடர்வதால் எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. இதுதொடர்பான பதிலை தெரிவிப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிட்டனர்.

இருக்கையில் அமர்ந்தபடி ஆணையர் மனு பெற்றது தொடர்பாக அதிமுக தேர்தல் பிரிவு செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கூறுகையில், "தேர்தல் அதிகாரி தேர்தலில் வேட்பு மனுவை பெறும்போது மட்டுமே அவர் அமர்ந்து இருக்க சட்டத்தில் அனுமதியுண்டு. புதுச்சேரி மக்களால் தேர்வான அனைத்து எம்எல்ஏக்களையும் அவமதிக்கும் வகையில் அமர்ந்து மனுவை வாங்குவது ஜனநாயக படுகொலை" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x