Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை : வரட்டுப்பள்ளத்தில் 52.4 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரட்டுப்பள்ளம் பகுதியில் 52.4 மி.மீ. மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மதியம் வரை வெயில் அடிக்கும் நிலையில், மதியத்திற்கு மேல் சிறு தூறலாக ஆரம்பித்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாப்பேட்டை, கொடிவேரி, பவானி, கோபி, சத்தியமங்கலம், சென்னிமலை, கவுந்தப்பாடி, குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை தொடங்கி, விடிய விடிய மழை பெய்தது. ஈரோடு நகரில் இரு நாட்களாக பெய்யும் மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன.

பவானிசாகரில் நீர் வரத்து

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், அணைக்கு விநாடிக்கு 9618 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 7300 கனஅடி உபரிநீரும் திறக்கப்படுகிறது.

ஈரோட்டில் நேற்று முன் தினம் பெய்த மழையளவு (மி.மீ) விவரம்:

வரட்டுப்பள்ளம் - 52.4, அம்மாபேட்டை - 31.6, கொடிவேரி - 26.2, பவானி - 24.8, கோபி -23.4, சத்ய மங்கலம் - 17, சென்னிமலை - 17, கவுந்தப்பாடி - 13.2, ஈரோடு - 8, மொடக்குறிச்சி - 8, பெருந்துறை - 7, குண்டேரிபள்ளம் - 5.2, நம்பியூர் - 5, கொடுமுடி 3.4 மீமீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x