Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் - 2 மாவட்ட ஊராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய திமுக : நெமிலி ஒன்றியத்தில் இழுபறியால் குதிரை பேரம் தொடங்கியது

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு மாவட்ட ஊராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது. நெமிலி ஒன்றியத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் குதிரை பேரம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியின்றி தேர்வானவர்கள் தவிர மற்ற 4,312 பதவிகளுக்கு 12,631 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சியை திமுக வசமாகியுள்ளது. மொத்தம் 14 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 13 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சியும் திமுக வசமாகியுள்ளது. மொத்தம் 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 12 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக வசம் 13 ஒன்றியங்கள்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி என 7 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 138 ஊராட்சி வார்டுகளில் திமுக 102, அதிமுக 20, பாமக 7, காங்கிரஸ் 2, சிபிஐ 1, சுயேட்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வேலூர் ஒன்றியத்தில் 11 வார்டுகளில் திமுக 6, அதிமுக 4, சுயேட்சை 1 இடம் பிடித்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள 26 வார்டுகளில் திமுக 22, அதிமுக 2, பாமக 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். குடியாத்தம் ஒன்றியத்தில் 31 வார்டுகளில் திமுக 18, சிபிஐ 1, அதிமுக 6, பாமக 2, புரட்சி பாரதம் 1, சுயேட்சைகள் 3 பேர்.

கணியம்பாடி ஒன்றியத்தில் 13 வார்டுகளில் திமுக 7, பாமக 3, அதிமுக 2, சுயேட்சை ஓரிடம். காட்பாடி ஒன்றியத்தில் 21 வார்டுகளில் திமுக 19, அதிமுக, சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஓரிடம். கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 21 வார்டுகளில் திமுக 17, அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக 13, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள் ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப் பாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் என மொத்தமுள்ள 7 ஒன்றியங்களில் உள்ள 127 வார்டுகளில் திமுக 80, அதிமுக 16, பாமக 17, காங்கிரஸ் 4, அமமுக, பாஜக தலா ஓரிடம், சுயேட்சைகள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சோளிங்கர் ஒன்றியத்தில் 19 வார்டு களில் திமுக 10, காங்கிரஸ் 2, பாமக 6, அதிமுக ஓரிடம் பெற்றுள்ளனர். அரக்கோணம் ஒன்றியத்தில் 23 வார்டுகளில் திமுக 17, அதிமுக, பாஜக, அமமுக தலா ஓரிடம், பாமக 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். நெமிலி ஒன்றியத்தில் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேட்சைகள் 2 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 10 வார்டுகளில் திமுக 5, காங்கிரஸ், அதிமுக, பாமக தலா ஓரிடம், சுயேட்சைகள் 2 பேர் வெற்றிபெற்றுள்ளனர். வாலாஜா ஒன்றியத்தில் 20 வார்டுகளில் திமுக 14, அதிமுக 3, பாமக, காங்கிரஸ், சுயேட்சை ஆகியோர் தலா ஓரிடம் வெற்றி பெற் றுள்ளனர். ஆற்காடு ஒன்றியத்தில் 17 வார்டுகளில் திமுக 13, அதிமுக 2, பாமக, சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஓரிடம் வென்றுள்ளனர். திமிரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக 13, அதிமுக 4, சுயேட்சை 2 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

நெமிலியில் இழுபறி

நெமிலி ஒன்றியத்தை கைப்பற்ற திமுகவுக்கு 2 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. எனவே, பாமக அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஒன்றியத்தை கைப்பற்ற திமுக முயற்சி எடுத்து வருகிறது. அதேநேரம், 4 கவுன்சிலர்களை பெற்றுள்ள அதிமுக, 5 கவுன்சிலர்களை பெற்றுள்ள பாமகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே ஒரு சுயேட்சை வேட்பாளர் பாமகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், பாமகவுக்கு தலைவர் பதவியை கொடுத்து துணைத் தலைவர் பதவியை அதிமுக பெறவும் பேச்சுக்கள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த குதிரை பேரத்தில் திமுகவே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x