Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

சுகாதாரத் துறையில் அவுட்சோர்ஸிங், ஒப்பந்த முறையில் பணியாற்றும் - 30 ஆயிரம் பேரை பணி வரன்முறை செய்ய முடியாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

சுகாதாரத் துறையில் அவுட்சோர்ஸிங், ஒப்பந்த முறையில் பணியாற்றும் 30 ஆயிரம் பேரை பணி வரன்முறை செய்ய இயலாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கண்ணகி நகரில் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2006 டிச. 30-ம் தேதி, கருணாநிதியால் ‘வருமுன் காப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டது. நாடே பாராட்டிய இத்திட்டத்துக்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மூடுவிழா நடத்தப்பட்டது. இத்திட்டத்தை கூடுதல் வசதிகளுடன் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின்கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ்ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் இன்று(12-ம் தேதி) காலை 9.30 மணிக்குதொடங்கி பிற்பகல் 4 மணி வரைமருத்துவ முகாம் நடக்கிறது. இதில்பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கண்ணகி நகரில் தொடங்கப்பட்ட முகாமில் கல்லீரல் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னைலிவர் பவுண்டேஷன் சார்பில் கல்லீரல் பாதிப்பு கண்டறியப்படுகிறது. மாற்று சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்றால், அது மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், டயாலிசிஸ், நாள்பட்ட நோய்களுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்2 குழந்தைகள் உட்பட 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணி ஒரு வாரத்துக்குள் முடியும். ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தற்போது வெளிப்படைத் தன்மையுடன் பணியிட மாற்றம் நடப்பதால், சுமார் 6,300 பேர் பயன்அடைந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவுட்சோர்ஸிங், ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி வரன்முறை செய்வது இயலாது. அவர்களை துறைவாரியாக கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.87 கோடி கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x