Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
வரும் முன் காப்போம் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 4 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கோவை 42-வது வார்டுக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், வரும் முன் காப்போம் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது. 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
வரும் முன் காப்போம் திட்ட முகாமில் 21 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், கர்ப்பிணிகள் மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். இலவச ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்குப் பிறகு முகாமிலேயே முதல் சிகிச்சையும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்களுக்கான சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று பயன்பெறலாம். மாநகராட்சி பகுதிகளில் மாதத்துக்கு 4 இடங்களில் இந்த முகாம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT