Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி - கோவையில் பூக்கள், பழங்கள் விற்பனை தீவிரம் :

நாடு முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை நாளையும் (அக்.14), விஜயதசமி நாளை மறுதினமும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பூக்கள், பழங்கள், காய்கனிகளின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

பூஜை பொருட்கள், பூக்கள், காய்கனிகள் வாங்க ஆர்எஸ்புரம் பூ மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் நேற்று பொது மக்கள் திரண்டனர். தொடர் மழையின் காரணமாக, பூக்கள் அழுகியும், வரத்து குறைந்தும் காணப்பட்டன. இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

செவ்வந்தி பூ கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும், அரளி ரூ.380-க்கும், கோழிக்கொண்டை ரூ.70-க்கும், மல்லிகைப் பூ ரூ.800-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், ஒன்றரை அடி மாலை ரூ.150-க்கும், 2 அடி செவ்வந்தி மாலை ஒன்று ரூ.200-க்கும், ரோஜா பூ மாலை ஒன்று ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வழக்கமாக 3 டன் அளவுக்கே செவ்வந்திப்பூக்கள் கோவை பூமார்க்கெட்டுக்கு வரும். ஆனால், பண்டிகையை முன்னிட்டு ஏறத்தாழ 15 டன் அளவுக்கு கடந்த 3 நாட்களாக செவ்வந்திப் பூக்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பூக்களின் விலை இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, 3 அடி உயரம் கொண்ட வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும், பூசணிக்காய் கிலோ ரூ.40-க்கும், பன்னீர் திராட்சை ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், ஆப்பிள் ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.80-க்கும், மாதுளை ரூ.200-க்கும், ஆரஞ்சு ரூ.70-க்கும், பூவன் வாழைத்தார் ரூ.1400-க்கும், பூவன் பழம் ஒரு கிலோ ரூ40-க்கும், செவ்வாழை தார் ரூ.800-க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், பொரி, கடலை, மாந்தளிர், தென்னங்குருத்து உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். பொரி ஒரு பக்கா ரூ.20 முதல் ரூ.30 வரைக்கும், அச்சுவெல்லம் கிலோ ரூ.70-க்கும் விற்கப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் கூட்டம் காரணமாக பூ மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x