Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
வெள்ளகோவில்: தனிநபர் காப்பீடுபோல பயிர் காப்பீட்டை மாற்ற வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளகோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனிநபர் காப்பீடுபோல பயிர்க்காப்பீடு இல்லை. ஒரு வருவாய் கிராம அளவில் பயிர் பாதிப்பு இருந்தால் மட்டுமே பிரீமியம் செலுத்திய விவசாயிகள், இழப்பீட்டுத் தொகையை பெறமுடியும். இது ஒரு திட்டமிட்ட மோசடி. பொதுவாக, பயிரிட்டவர்கள் பயிரைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை. வங்கிகளில் பயிர்க் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு பாதுகாப்பு வேண்டி, கடன் தொகையில் ஒரு பகுதியை விவசாயிகளின் ஒப்புதலை பெறாமலேயே பயிர் காப்பீட்டு பிரீமியத் தொகையாக வங்கி நிர்வாகம் செலுத்துவது இன்றைய நடைமுறை. பிரீமியத் தொகையாக ரூ.100 செலுத்தப்படுவதாக வைத்துக் கொண்டால், இதில் காப்பீட்டு நிறுவன ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவாக ரூ.50 சென்றுவிடுகிறது. மீதித் தொகையை இழப்பீடாக பெறும்போது, ரூ.25 கையூட்டாக சென்றுவிடுகிறது. இது ஒருபுறம்இருக்க, மறுபுறம் பயிரிட்டவர்களுக்கு அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. தனிநபர் காப்பீடுபோல பயிர் காப்பீட்டை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காதவரை பயிர் காப்பீட்டு திட்டம் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT