Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
நத்தக்காடையூரை அடுத்த காளிவலசு பகுதியில் தேங்காய் நார் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:
காங்கயம் வட்டம் நத்தக்காடையூரை அடுத்த மருதுறை ஊராட்சிக்கு உட்பட்டது காளிவலசு. இங்கு 30 ஏக்கருக்கும் மேற்பட்ட உச்சவரம்பு நிலங்கள் உள்ளன. முறைகேடாக பத்திரப்பதிவு செய்து, மேற்கண்ட விளைநிலங்களில் காங்கயம்,வெள்ளகோவில் பகுதிகளில் இயங்கும் தேங்காய் நார் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை கொட்டிவைத்து காயவைக்கின்றனர். இதனால் கழிவுகளில் உள்ள தண்ணீர், விளைநிலங்களில் இறங்கி நிலத்தடி நீர் மாசடைகிறது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி, மருதுறை ஊராட்சிப் பகுதிகளில் தேங்காய் நார் கழிவுகள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவிப்புப்பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நீதிமன்ற உத்தரவையும் மீறி, அதே பகுதிகளில் லாரி,டிராக்டர் என தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தேங்காய்நார் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இவை, உலர்ந்தவுடன் காற்றில் பறப்பதால், குடியிருப்புப் பகுதிகளில் வசிக்க முடியாத நிலையுள்ளது. தேங்காய் நார் கழிவுகள் கொட்டப்படும் இடத்துக்கு அருகே நொய்யல் ஆறு செல்கிறது. தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய்ஆலைகள் அதிகம் உள்ள காங்கயம் நகரில், கடந்த 15 ஆண்டுகளாக தேங்காய் கரி சுடும் ஆலைகள், தேங்காய் நார் கழிவுகள் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT