Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(30). இவரது மனைவி மாரியம்மாள்(25). இத்தம்பதிக்கு ரீத்திஷ்(6), ராகேஷ்(4) என 2 மகன்கள் இருந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரியம்மாள் தனது கணவன், மகன்களை விட்டு விட்டு, பெரியபாளையம் அருகே வடமதுரையில் தன் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். இரு மகன்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மாரியம்மாள் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவனிடம் உள்ள தன் 2 மகன்களை மீட்டுத் தருமாறு மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வரும் 14-ம் தேதி ஆஜராகுமாறு கணேசனுக்கு போலீஸார் உத்தரவிட்டனர்.
இச்சூழலில், நேற்று முன்தினம் இரவு திடீரென கணேசன், தனது 2 மகன்களுடன் மாயமானார். 3 பேரையும் கணேசனின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, வெள்ளானூர் ஏரியில் ரீத்திஷ், ராகேஷ் ஆகியோரின் உடல்கள் மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஏரிக்கரையோரம் உள்ள புதரில் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு துடித்துக் கொண்டிருந்த கணேசனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மனைவியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொள்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணேசன் இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT