Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மாநில தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் பதவி நீக்கம் செய்யுங்கள் : முதல்வர் ரங்கசாமிக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை இருமுறை தள்ளி வைக்க காரணமான மாநில தேர்தல் ஆணையர் தாமாகமுன்வந்து ராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பதவி நீக்கம் செய்யுங்கள் என்று முதல்வர் ரங்கசாமியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று வெளியிட்ட வீடியோ தகவல்:

உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராவிட்டால் அது சமூகநீதிக்கு எதிரானது. ஏன் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார்?

அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசித்தும், எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டும் உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாநில தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸூக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. வனத்துறை அதிகாரியை தன்னிச்சையாக நியமித்தது கிரண்பேடி தான். தாமஸ் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் தன்னிசையாக செயல்பட்டதால் இரண்டு முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தடை உத்தரவு தரப்பட்டுள்ளது. இது மாநில அரசுக்கு வெட்கக்கேடு. தேர்தலை தள்ளி வைக்க காரணமானதற்கு பொறுப்பேற்று மாநில தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். 2018-19-ல் இதற்கான கோப்பை கிரண்பேடிக்கு அனுப்பினோம். அவர் ஒப்புதல் தரவில்லை. புதுச்சேரியில் 3 மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தேர்தல் நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராமல் தேர்தலை நடத்த முற்பட்டால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் தெருவில் இறங்கி போராடும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x