Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மதுரையில் யு.எஸ்.ஏ.ஐ.டி திட்ட மையங்களை பார்வையிட்ட அமெரிக்க துணைத் தூதர் :

அமெரிக்க துணைத் தூதர் ஜுடித் ரேவின் மதுரையில் அமெரிக்க முகமையின் (யு.எஸ்.ஏ.ஐ.டி) பெண்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் செயல்படும் பெண் குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார்.

2019 செப்டம்பரில் தொடங்கப்பட்ட யு.எஸ்.ஏ.ஐ.டி.யின் இத்திட்டம் கிராம பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக நுண்தொழில் முனைவோராக மாறுவதற்கு வழி செய்கிறது.

இன்டஸ்ட்ரீ கைவினை அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த திட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பெண் நுண்தொழில் முனைவோர்களுடன் அமெரிக்க துணைத் தூதர் ஜுடித் ரேவின் கலந்துரையாடும்போது, "இந்த திட்டம் உள்ளூர் பெண்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி இருக்கிறது என்பதை அறிந்து வியப்படைந்தேன். இந்தியாவில் பெண்களின் பொருளாதார வலுவூட்டல்களை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க அரசின் அர்ப்பணிப்புக்கு இத்திட்டம் ஒரு எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில் மேலும் பல பெண் நுண்தொழில் முனைவோர்களை இந்தியா முழுவதும் காண முடியும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

இன்டஸ்ட்ரீ கைவினை அறக்கட்டளையின் இணை நிறுவனர் நீலம் சிப்பர் பேசுகையில், இத்திட்டம் மூலம் 12 பெண்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் நேரடியாக 2,400 பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.

மதுரை ரெட்டியார்சத்திரம் துப்புரவு பூங்காவில் யு.எஸ்.ஏ.ஐ.டி. ஆதரவுடன் செயல்படும் வாஷ் நிறுவனத்தையும் ஜுடித் ரேவின் நேற்றுமுன்தினம் பார்த்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x