Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஈரோட்டில் 2-வது நாளாக தொடர் மழை சத்தியில் காட்டாற்று வெள்ளம் :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் கன மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடம்பூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழை மற்றும் சூறாவளிக் காற்றால், அம்மாபேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.

கொடுமுடியில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல் சென்னிமலை, தாளவாடி, ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும், அணைப்பகுதிகளான குண்டேரிப்பள்ளம், கொடிவேரி, வரட்டுப்பள்ளம், பவானிசாகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் நாளாக நேற்றும் மழை பெய்தது. மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பல இடங்களில் மழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு விவரம் (மி.மீ):

கொடுமுடி 38.2, சென்னிமலை 31, தாளவாடி 23.4, ஈரோடு 23, குண்டேரிப்பள்ளம் 14.6, கோபி 13.6, பெருந்துறை 9, கொடிவேரி 9, வரட்டுப்பள்ளம் 4, சத்தியமங்கலம் 2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x