Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

சேலம், ஈரோடு மாவட்ட - ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி :

சேலம், ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் பதவி, மாவட்டப் பஞ்சாயத்து 10-வது வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 24 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த 9-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 79 சதவீதம் வாக்கு பதிவானது. வாக்கு எண்ணிக்கை நேற்று 12 மையங்களில் நடந்தது. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்முகம், அதிமுக வேட்பாளர் முருகனை விட 10,472 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகள் பெற்று,வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர்  தேவி குமார் 1,222 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 320 வாக்குகளும் பெற்றனர்.

கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு புத்தூர் அக்ரஹாரம்- சிவானந்தம், சிக்கனம்பட்டி- ரங்கநாதன், சேலத்தாம்பட்டி- கண்மணி, கோவிந்தம்பாளையம்- விஜயா, புளியம்பட்டி- கோவிந்தசாமி, அதிகாரிப்பட்டி- சத்யா, வீராணம்- செல்வராணி, வெள்ளார்- சுகந்தி பழனிசாமி, தாதாபுரம்- வளர்மதி, கரிக்காப்பட்டி- விஜயா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருந்த 20 ஊரக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு 65 பேர் போட்டியிட்டனர். 9-ம் தேதி நடந்த தேர்தலில் 70. 22 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பவானி, டி.என்.பாளையம், அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட 9 மையங்களில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 5-ல், திமுக வேட்பாளர் ஜெ.சதாசிவமும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 4-வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கே.வி.விவேகானந்தனும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10-ல், ரா.செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.

இதில், பெருந்துறை ஒன்றிய 10-வது வார்டில் உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயக்குமார், சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். தற்போது, அந்த இடத்தை திமுக கைப்பற்றியுள்ளது.

நாமக்கல்லில் திமுக வெற்றி

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 4,973 வாக்குகள் பதிவானது. 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துக்கருப்பன் 3,135 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் விஜய் 1,696 வாக்குகள் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x