Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு பதிலாக அவரது வாக்கை கணவர் செலுத்தியுள்ளார். எனவே வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு, தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், ‘காங்கயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டுக்கு, கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி வரதராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருப்பூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.
இடைத்தேர்தலில் அவருக்கு பதிலாக, பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் அவரது கணவர் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி வரதராஜனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறும்போது, ‘‘மேற்கண்ட புகார் தொடர்பாக, அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT