Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
தரமற்ற விதைகளை வழங்கி பந்தல் காய்கறி சாகுபடியில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட காரணமான தனியார் விதை நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் பீர்க்கன், பாகற்காய், புடலை உள்ளிட்ட பந்தல் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பந்தல் காய்கறி சாகுபடியில் வீரிய ஒட்டுரக விதை, உரம், மருந்து, பந்தல் அமைத்தல், ஆள்கூலி ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வீரிய ஒட்டுரக விதைகளையே அனைத்து விவசாயிகளும் பாகற்காய் மற்றும் பீர்க்கன் சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் நல்ல விளைச்சலை அளித்த விதைகள், கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த விளைச்சல், அதிக நோய் தாக்குதல், காய்கள் வளைந்து, சுருண்டு விடுவது, பிஞ்சிலேயே பழுத்து விடுவது, நோய் தாக்கி, காய்ப்பு பருவத்தில் செடிகளில் இலைகள் சுருங்கி பழுத்து அழுகுவது என வைரஸ் தாக்குதலால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலை துறை, விதை சான்றளிப்பு துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசின் வேளாண் திட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு இலவசமாகவும், மானியத்திலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தனியார் நிறுவன விதைகளைப் பயன்படுத்தி பாகற்காய் பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT