Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 40 மேஜைகள் அமைத்து நடவடிக்கை :

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (12-ம் தேதி) நடைபெறுகிறது. 12 வாக்கு எண்ணும் மையங்களில் 40 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சிலர் பதவி விலகல், மரணம் உள்ளிட்ட காரணங்களால் 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம உறுப்பினர் பதவிகள், தலா ஒரு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 35 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 11 தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, 24 பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த 9-ம் தேதி 195 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 79 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குச்சீட்டு பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட இடங்களில், அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

இதற்காக இப்பணியில் ஈடுபடவுள்ள 120 பணியாளர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு 107 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 மேஜைகளில் 30 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், மொத்தம் 195 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 40 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x