Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

சொத்தை பறித்துக் கொண்டு - பெற்றோரை கைவிட்ட மகன் மீது ஆட்சியரிடம் புகார் :

சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு மகன் தன்னையும், தனது மனைவியையும் பராமரிக்கவில்லை என்றும், சொத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயலைச் சேர்ந்த முதியவர் சண்முகம்(75). இவர், தனது மனைவி முத்துலெட்சுமியுடன் ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், தங்களின் மகன் சொத்தை பறித்துக் கொண்டு தங்களை பராமரிக்காமல் கைவிட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து சண்முகத்தின் மனைவி முத்துலெட்சுமி கூறியதாவது: எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ராமநாதபுரம் நகர் நீலகண்டி ஊருணி கே.கே.நகரில் 5 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். வயது முதிர்ந்த காரணத்தால் எனது கணவரும், நானும் சொந்த ஊரில் உள்ள வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது மகன் முனியசாமியும், மருமகளும் 2016-ம் ஆண்டு என்னையும், எனது கணவரையும் பராமரித்துக் கொள்வதாகக் கூறி, வீடுகளை தானமாக எழுதி வாங்கிக் கொண்டனர். அதன்பின் எங்களை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். அதனையடுத்து எனது சகோதாி வீட்டில் நாங்கள் தஞ்சம் அடைந்துள்ளோம். எனது கணவர் உடல்நிலை சரியில்லாததால் படுத்த படுக்கையாக உள்ளார். அதனால் மனு அளிக்க ஆம்புலன்ஸில் அழைத்து வந்தோம். மகனிடமிருந்து சொத்தை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x