Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

ஓசூர் உழவர் சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு :

ஓசூரில் கரோனா இரண்டாவது அலை எதிரொலியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட உழவர் சந்தை நேற்று திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய உழவர்சந்தையாக ஓசூர் உழவர் சந்தை திகழ்கிறது. இங்கு தினமும் சராசரியாக 80 டன் காய்கறிகளை 250-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விற்பனையாகும் தரமான காய்கறிகளை வாங்கிச் செல்ல ஓசூர் பகுதியில் இருந்தும், பெங்களூரு, ஆனேக்கல், உள்ளிட்ட வெளிமாநில நகரங்களில் இருந்தும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் வந்து செல்கின்றனர். தினமும் பரபரப்புடன் இயங்கி வந்த ஓசூர் உழவர் சந்தை கரோனா இரண்டாவது அலை ஊரடங்கு எதிரொலியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ராம்நாயக்கன் ஏரிக்கரை, காமராஜ் காலனி உள்ளிட்ட இடங்களில் உழவர் சந்தை கிளைகள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை ஊரடங்கு தளர்வு காரணமாக ஓசூர் உழவர் சந்தையை அக்.10-ம் தேதி திறக்க வேண்டும், இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று காலை உழவர் சந்தையின் பிரதான வாயிலுக்கு வாழை மரம், மாவிலை, பூமாலை தோரணம் கட்டி, வாயிலில் வண்ண கோலங்கள் இட்டும் உழவர் சந்தையை அழகுபடுத்திய விவசாயிகள் காய்கனி விற்பனையை தொடங்கினர். இதனிடையே உழவர் சந்தை முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மாதையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உழவர் சந்தை விவசாயி களுக்கு காலை உணவு வழங்கிய பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உழவர் சந்தை திறக்கப் பட்டுள்ளதால் விவசாயிகளும், நுகர்வோரும் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x