Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

குமரியில் விடிய விடிய கனமழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்தது.

இம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வந்தது. மழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. நேற்று முன்தினம் இரவில் கனமழை கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

ரப்பர் பால்வெட்டுதல், தேங்காய் வெட்டுதல், கட்டிட தொழில் என அனைத்து தரப்பு தொழில்களும் முடங்கின. கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதிகபட்சமாக நேற்று இரணியலில் 68 மிமீ மழை பதிவானது. களியலில் 38 மிமீ, குழித்துறையில் 35, நாகர்கோவிலில் 15, சிவலோகத்தில் 17, தக்கலையில் 10, குளச்சலில் 24, மாம்பழத்துறையாறில் 18, கோழிப்போர்விளையில் 32, அடையாமடையில் 29, குருந்தன்கோட்டில் 36, ஆனைக்கிடங்கில் 20 மிமீ மழை பெய்திருந்தது.

மழை தொடர்வதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறுஅணைகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து 1,338 கனஅடி உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.42 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 605 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 25 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 7.42 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x