Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - காரைக்காலில் கடைகள் அடைப்பு :

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்த வேண்டும். மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து தீர்மானங்கள் குறித்து வலியுறுத்தினர்.

இதற்கிடையே, காங்கிரஸ்- திமுக கூட்டணிக் கட்சியினர், இடஒதுக்கீட்டை ரத்து செய்து தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் அக்.11-ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகரம், திருமலைராயனபட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அனைத்துக் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழக, புதுச்சேரி அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சியினர் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x