Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழை - வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு :

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக மன்னார்குடியில் 7 செ.மீ, முத்துப்பேட்டையில் 6 செ.மீ, திருத்துறைப்பூண்டியில் 4 செ.மீ, திருவாரூரில் 2.5 செ.மீ மழை பதிவானது. இந்த கனமழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருவாரூரை அடுத்த கொடிக்கால்பாளையம் பகுதியில் வசிக்கும் முகமது இக்பால் என்பவரின் வீட்டில், பிலாவடிமூளை பகுதியைச் சேர்ந்த கிளியம்மாள்(65) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று முகம்மது இக்பாலின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து கிளியம்மாள் மீது விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய கிளியம்மாள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவாரூர் நகர போலீஸார், கிளியம்மாளின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில்...

அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): அரியலூர் 101.1, செந்துறை 11, திருமானூர் 9.8, ஜெயங்கொண்டம் 8.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x