Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் :

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சோளிங்கர் ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் ஈடுபட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய தேர்தல் அதிகாரிகளிடம், அவர்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் 7 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் தபால் வாக்குகள் வழங்கக் கோரி 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சோளிங்கர் - சித்தூர் சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலையறிந்த சோளிங்கர் காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து பாதிப்பதால் மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தை வருமாறு அழைத்துச் சென்றனர். அங்கு பயிற்சிக்கு சென்றவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் வழங்கியதாக தெரிவித்தனர். அதேநேரம், தாங்கள் பயிற்சியில் பங்கேற்காத நிலையில் தேர்தல் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டும் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x