Last Updated : 03 Oct, 2021 03:10 AM

 

Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

இந்து பெண்ணை காதலித்த முஸ்லிம் இளைஞர் கொலை? : இந்துத்துவா அமைப்பினரிடம் போலீஸார் விசாரணை

கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவத்தில், இந்துத்துவா அமைப்பினரிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஆஸம் நகரைச் சேர்ந்தவர் அர்பாஸ் முல்லா (25). கடந்த 27-ம் தேதி வேலைக்குச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அஸம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி பெலகாவியை அடுத்துள்ள கானாப்புரா அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது, அர்பாஸ் முல்லாவின் உடல் தான் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதுகுறித்து பெலகாவி போலீஸார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அர்பாஸ் முல்லாவின் தாயார் ஃபாத்திமா நேற்று முன்தினம் அளித்த போலீஸ் புகாரில், “எனது மகன் இந்து மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். இதை அறிந்த இந்துத்துவா அமைப்பின் நிர்வாகிகள் சிலர், காதலை கைவிடுமாறு அவரை மிரட்டினர். அதற்கு என் மகன் ஒப்புக்கொள்ளாததால் திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள இந்துத்துவா அமைப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x