Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM
கர்நாடகாவில் மங்களூரு அருகே 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த செய்த காவலர் சிவராஜ் நாயக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் தக்ஷின கன்னட மாவட்டம் கடபாவை சேர்ந்த தொழிலாளி மஞ்சுநாத் கடந்த 21-ம் தேதி கடபா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய 16 வயது மகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்தேன். அந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க கடபா காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சிவராஜ் நாயக் என் வீட்டுக்கு அடிக்கடி வந்தார். அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகும், சிவராஜ் நாயக் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றார்.
எனது மகளுக்கு திருமண ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து எனக்கு தகவல் தெரிந்ததும் சிவராஜ் நாயக் என் மகளை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். என் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ரூ. 35 ஆயிரம் கொடுத்து கருக்கலைப்பு செய்துவிடுமாறு மிரட்டினார்.
கடந்த 18-ம் தேதி வீட்டில் இருந்த எனது மகள் மற்றும் மனைவியை காணவில்லை. காவலர் சிவராஜ் நாயக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி என் மகளையும், மனைவியும் கடத்திவிட்டதாக சந்தேகிக்கிறேன்.
இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த கடபா போலீஸார், சிவராஜ் நாயக் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (2) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்புச் சட்டம் (POCSO) பிரிவு 5 மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று சிவராஜ் நாயக்கை கைது செய்த போலீஸார் தக்ஷின கன்னட மாவட்ட நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தினர். இதனிடையே காணாமல் போன சிறுமி மற்றும் தாயார் ஆகியோரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT