Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM
கோவை அருகே கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சஞ்சய்(16), குறிச்சி பேஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ஆண்ட்ரோ(16), சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பூர்ணேஷ்(16), ராகுல்(16), பிரணேஷ்(17). நண்பர்களான இவர்கள்,மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர். 5 பேரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கேரளமாநிலத்தில் உள்ள வாளையாறு அணைக்குகுளிக்கச் சென்றனர். அப்போது சஞ்சய், ஆண்ட்ரோ, பூர்ணேஷ் ஆகியோர் அணையின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினர்.
இதைப் பார்த்த சக நண்பர்கள் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். வாளையாறு போலீஸார், பாலக்காடு தீயணைப்புத் துறையினர் அணையில் மூழ்கிய மூவரையும் படகு மூலம் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால், மீட்புப் பணி தள்ளி வைக்கப்பட்டது. நேற்றுகாலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. மேலும், கொச்சியில் உள்ள கடற்படை வீரர்கள் சிலரும் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரத் தேடுதலுக்கு பின்னர் பூர்ணேஷ், ஆண்ட்ரோ, சஞ்சய் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வாளையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT