Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் சுகாதாரத் துறையில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் என்று அவர் உறுதிபட கூறினார்.
நாட்டு மக்கள் அனைவரின் உடல்நலத்தை பேணிக் காக்கும் நோக்கத்தில் டிஜிட்டல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘ஆயுஷ் மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம் கொண்டு வரப்படும்’ என்று கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் பேசியதாவது:
டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 43 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் 80 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடங்கிய பிறகு, ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலி மூலம் வைரஸ் பரவல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. இதனால், தொற்று அதிகமாக பரவுவது தடுக்கப்பட்டது.
இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ், அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடிந்தது. கரோனா தடுப்பூசி பணிகளுக்காக ‘கோ-வின்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கான முன்பதிவு முதல் சான்றிதழ் வரை அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிய முடிகிறது. இதுபோன்ற மிகப்பெரிய ஒரு நடைமுறை வேறு எதுவும் இல்லை. நாடு முழுவதும் இதுவரை 86 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோ-வின் இணையதளம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம், நமது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும். ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சை தொடர்பான பிரச்சினைகளுக்கு இத்திட்டம் மூலம் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தனி ஐடி, அடையாள எண்ணுடன் அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொருவரின் உடல்நலம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். அந்தத் தகவல்களை மொபைல் அப்ளிகேஷன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் எளிமைப்படுத்தப்பட்டதுபோல, சுகாதாரத் துறையில் இத்திட்டம் மிகப் பெரிய பங்கு வகிக்கும்.
தனிப்பட்ட ஒருவரின் உடல்நலம் தொடர்பான ரகசியம், அந்தரங்கம் என அனைத்தும் பாதுகாப்பாக இருப் பதை இத்திட்டம் உறுதி செய்யும். நாடு முழுவதும் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை விவரங்களின் களஞ் சியமாக டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதார பணியாளர்களின் பதி வேடு (எச்பிஆர்), மருத்துவமனைகள் உட்பட அனைத்து சுகாதார வசதிகள் பதிவேடு (எச்எப்ஆர்) ஆகியவை இருக்கும். இவற்றின் மூலம் மருத் துவர்கள், மருத்துவமனைகள், சிகிச்சை வசதிகள் குறித்த விவரங்களை எளிதில் அறிய முடியும்.
இத்திட்டம் ஏற்கெனவே 6 யூனி யன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, ஏழை எளிய மக் களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ‘ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜ்னா திட்டம்’ தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இலவச மாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிடிவாதம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT