Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM
பாலிசி கையேடுகளை அச்சிட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் சேர்க்கும் வகையில் எல்ஐசி நிறுவனமும் இந்திய தபால் துறையும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இதுதொடர்பாக எல்ஐசி (ஆயுள் காப்பீட்டு கழகம்)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எல்ஐசியின் பாலிசி கையேடுகளை (புக்லெட்) அச்சிட்டு, சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்களின் முகவரியில் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய தபால் துறையுடன் ‘பிரின்ட் டு போஸ்ட் சொல்யூஷன்’ என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம்மும்பையில் உள்ள எல்ஐசி தலைமையகத்தில் எல்ஐசி, அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் பேசும்போது, ‘‘எல்ஐசியை பொருத்தவரை, பாலிசிகளை சம்பந்தப்பட்ட முகவரியில் பத்திரமாக சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அஞ்சல் துறை தனதுசேவையை மேம்படுத்த டிஜிட்டல்மயம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலிசிதாரர்கள் சிறப்பான சேவையை பெறுவார்கள்’’ என்றார்.
எல்ஐசி நிர்வாக இயக்குநர்கள் முகேஷ்குமார் குப்தா, ராஜ்குமார், மினி ஐபே, செயல் இயக்குநர் பிரவீன் குமார் பங்கேற்றனர்.
அஞ்சல் துறை சார்பில் டெல்லிதுணை தலைமை இயக்குநர் அஜய்குமார் ராய் பேசும்போது, ‘‘பெறப்பட்ட நாளிலேயே டெலிவரி என்பதை நோக்கமாக கொண்டு அஞ்சல் துறை செயல்படுகிறது. இரு நிறுவனங்களின் நல்லுறவை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தியுள்ளது’’ என்றார்.
தலைமை போஸ்ட்மாஸ்டர் டி.எம்.லதா, தெலங்கானா வட்ட அஞ்சல் சேவை இயக்குநர் கே.ஏ.தேவராஜ், மகாராஷ்டிரா வட்டத்தின் நவி மும்பை பிராந்திய தலைமை போஸ்ட்மாஸ்டர் கணேஷ் வி.சவலேஷ்வர்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர். l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT