Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM
தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கைஅறிவிப்பில், நாட்டுக்காகப் பாடுபட்டதலைவர்களின் கருத்துகளையும் சமூகசிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் நாளில் தலைப்புகள் அறிவிக்கப்படும். பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் 2 கல்லூரி மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரும் 2 பள்ளி மாணவர்களை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அதன்படி, போட்டிகள் நடைபெறும் இடம் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர் மூலமாகவும் அறிவிக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும் 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல, போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் மாவட்டத்துக்கு 2 பேர்தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT