Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

சிங்கம்புணரி அருகே முறையாக பராமரிக்காததால் - 10 கி.மீ. நீள பெரியாறு கால்வாய் மாயம் :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 10 கி.மீ. தூரத்துக்கு பெரியாறு கால்வாய் மாயமானதால் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் இருந்து சிங்கம்புணரிக்கு பெரியாறு விஸ்தரிப்பு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஆங்காங்கே 7 உட்பிரிவு கால்வாய்கள் பிரிகின்றன. இதில் 5, 6, 7 ஆகிய உட்பிரிவு கால்வாய்கள் மூலம் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகள் பயன்பெறுகின்றன. 7-வது உட்பிரிவு கால்வாய் கருப்பர்கோவில்பட்டியில் இருந்து, மு.சூரக்குடி, முறையூர், அய்யப்பட்டி, எஸ்எஸ்.கோட்டை, ஆறுகுடிபட்டி, எரியூர் வரை 15 கி.மீ. தூரம் செல்கிறது. இக்கால்வாயில் 2005-ம் ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கவில்லை. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சிலர் இக்கால்வாயை சேதப்படுத்தி கற்களை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் இக்கால்வாய் 10 கி.மீ. தூரத்துக்கு ஆங்காங்கே சேதமடைந்தும், மண் மேவியும் காணப்படுகிறது.

இதனால் கடந்த ஆண்டு 7-வது உட்பிரிவு கால்வாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் 5 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், சேதமடைந்த இக்கால்வாயை சீரமைத்து தண்ணீர் திறக்க வேண்டுமென மு.சூரக்குடி கள்ளர்பட்டியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் உதயசூரியன் தலைமையிலான விவசாயிகள் சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x