Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

கூட்டுறவு கடன் தள்ளுபடி முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல்

தமிழகத்தில் கடன் தள்ளுபடியில் முறைகேடு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளோருக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோரிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருக்கும். இதனால் பெரிய தவறுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தவறில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் மூக்கையா என்பவர் 300 கணக்குகள் மூலம் நகைக் கடன் பெற்றுள்ளார்.

இதுபோல் சில நபர்கள் 100, 200, 300, 600 கணக்குகளில் நகைக் கடன் பெற்றுள்ளனர். இதை அதிகாரிகள் விசாரணை செய்ததில் கடன் பெற்றவர்களுக்கும் கூட்டுறவுகடன் சங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. தவறு செய்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி மொத்தம் 12,110 கோடியில்சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஏறத்தாழ 2500 கோடி அளவுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மொத்தக் கடன் தள்ளுபடியில் 25 சதவீதமாகும். இந்த மாவட்டங்களில் சோதித்துப் பார்த்தபோது விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு 110 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குவாரி நிலத்துக்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 4,451 கூட்டுறவு கடன் சங்கங்களில் சோதனை நடந்து வருகிறது. கடன் தள்ளுபடி பெற வருவோரின் தகுதியை உறுதிசெய்த பின்புதான் அவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தனியார் நகை அடகுக்கடை நடத்துபவர்கள் கூட தங்களிடம் அடமானத்துக்கு வரக்கூடிய நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கூடுதலாக லாபம் அடைந்துஉள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x