Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

பிரிட்டனுக்கு பயணம் செல்வதற்கு - அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு சேர்ப்பு :

புதுடெல்லி

பிரிட்டனுக்கு பயணம் செல்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் இந்தியாவில் தயாராகும் கோவிஷீல்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று முன்தினம் கூறும்போது, “அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி பட்டியலில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டை சேர்க்காமல் இருப்பது பாரபட்சமான முடிவு.இதனால் இந்தியர்கள் பிரிட்டனுக்கு பயணம் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்காததற்கு கடும்கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரிட்டன் உறுதி அளித்ததாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டனுக்கு பயணம் செல்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு நேற்று சேர்க்கப்பட்டது. இதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகள் வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, 2 டோஸ்கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கரோனா பாதிப்பின் அடிப்படையில் பிற நாடுகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என பிரிட்டன் வகைப்படுத்தி இருந்தது. இதில் இந்தியா இப்போது ஆரஞ்சு பட்டியலில் உள்ளது. இனி புதிய விதிகளின்படி, சிவப்புஎன்ற பட்டியல் மட்டுமே இருக்கும்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x