Last Updated : 23 Sep, 2021 03:12 AM

 

Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

புதுவையில் அதிகரிக்கும் பாஜகவின் தலைமைத்துவம் - செல்வகணபதிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி? :

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளைத் தொடர்ந்து எம்பி பதவியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியில் முதல் பாஜக எம்பியாகிறார் செல்வகணபதி.

பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுபட்ட புதுவையில் 1963 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது.

தேர்தலில் பலமுறை பாஜக போட்டியிட்டுள்ளது. ஆனால் முதன்முறையாக கடந்த 2001ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் முதன்முறையாக பாஜக சட்டப்பேரவையில் நுழைந்தது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் பாஜக வெல்லவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோர் பாஜக நியமன எம்எல்ஏக்களாக அப்போது இருந்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றது. என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஆகிய பதவிகளை பாஜக பெற்றது. இதுதவிர பாஜகவை சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 33 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 9 பேர் உள்ளனர்.

புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை.ஆனால் பலமுறை மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுவை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன்மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்பியாகிறார்.

புதுச்சேரி மாநிலங்களவை எம்பி பதவியை பெற ஆளும் கட்சி கூட்டணியான என்ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் நிலவியது. முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எம்பி பதவியை பெற முதல்வர் ரங்கசாமி மூலம் என்.ஆர்.காங்கிரஸில் பல முயற்சிகளை மேற்கொண்டார். பாஜக மேலிடம் நேரடியாக தலையிட்டதன் பேரில் மாநிலங்களவை எம்பி பாஜகவுக்கு சென்றது. இதன்பிறகும் கடந்த மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட்டு, தோல்வியடைந்த டாக்டர் நாராயணசாமியை, பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் எம்பி வேட்பாளராக தேர்வு செய்ய முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்யும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் பாஜக மேலிடம் இதை மறுத்துவிட்டது. பாஜகவில் எம்பி பதவியை பெற கடும் போட்டி நிலவியது.

பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் செல்வகணபதி, காரைக்கால் தொழிலதிபர் வாசுதேவன், சென்னையை சேர்ந்த ஆடிட்டர்கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் எம்பி பதவிக்கான பட்டியலில் பேசப்பட்டது. இறுதியில் பாஜக தலைமை செல்வகணபதியை மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்வு செய்தது.

இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, "பாஜக தலைமை பல கட்டமாக எம்பி பதவிக்கு உரியவரை ஆலோசித்தது. அதில்செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் கல்வியாளர். இவர் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளுக்கு நெருக்கமாக இருந்தார்.கல்வியாளரான செல்வகணபதியின் கல்வி வளாகத்தில் இந்துஅமைப்புகளின் விழாக்கள், கூட்டங்கள் நடத்த அனுமதிப்பார். கம்பன் பேரவை, விநாயகர் சதுர்த்திபேரவையில் நிர்வாகியாக செயல்பட்டவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல விஷயங்களில் கட்சிக்கு பெருந்தன்மையாக செயல்பட்டதாலும், கட்சிக்கு நீண்டகாலமாக விசுவாசமாக செயல்பட்டு வருவதாலும் அவரை கட்சி தேர்வு செய்தது." என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x