Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
தத்கல் திட்டத்தின்கீழ், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் (விநியோகம்) சிவலிங்கராஜன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
2020-21 நிதி ஆண்டுக்கான விரைவு மின் இணைப்பு வழங்கும்தத்கல் திட்டத்தின்கீழ், வழிகாட்டிநெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏற்கெனவேமின்இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கலாம். இத்திட்டத்தின்கீழ், முற்றிலும் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே இணைப்புவழங்கப்படும். இதனால், ஏற்கெனவே மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் பதிவு மூப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தாழ்வழுத்த பிரிவில் விவசாயமின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அதிகபட்சமாக 15குதிரைத் திறன் வரையுள்ள மோட்டார் மின் இணைப்பு விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், 5 குதிரைதிறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரை திறனுக்கு ரூ.2.75லட்சம், 7.5 முதல் 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஒருமுறை கட்டணம் செலுத்தி இம்மாதம் 14-ம் தேதி முதல் இத்திட்டத்தில் சேரலாம். தத்கல் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டும்.
இணைப்பு வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு, பணியை செயல்படுத்துதல், கெப்பாசிட்டருடன் கூடிய மோட்டார் பம்ப் செட் தயார்நிலையில் இருப்பதை, மின் இணைப்பு வழங்குவதற்கு முன்புஆய்வு செய்ய வேண்டும்.
தத்கல் திட்டம் செயல்படுத்துவது குறித்த அறிக்கையை வாரம்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள், தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT