Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

தேசிய வங்கிகளில் காலியாக உள்ள - இயக்குநர் பணியிடங்களை நிரப்ப ஊழியர் சங்கம் வலியுறுத்தல் :

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள இயக்குநர்கள் பணியிடங்களை மத்திய அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண்மை, நிர்வாக செயல்பாடுகளில் வங்கி இயக்குநர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

1970-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தலைவர், மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர்கள், அரசுப் பிரதிநிதிகள், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் வங்கி நிர்வாகக் குழுவில் இடம்பெற வேண்டும்.

ஆனால், பல்வேறு வங்கிகளில் இயக்குநர் பதவிகள் காலியாக உள்ளன. 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 52 சதவீத இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பணியாளர் இயக்குநர், அதிகாரி இயக்குநர் பணியிடங்கள் 2014 முதல் காலியாக உள்ளன.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தேசிய வங்கி நிர்வாகிகள் மற்றும் அரசுக்கு, இயக்குநர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், இயக்குநர் பதவிகளை நிரப்ப எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், வங்கிகளின் இயக்குநர் குழு, குறைந்த அளவு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.

எனவே, காலியாக உள்ள வங்கி இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x