Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்திலிருந்த மரங்களை அகற்றி மறுநடவு :

மதுரை

மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள பொதுப்பணித் துறை கட்டிட வளாகத்திலிருந்த 15-க்கும் மேற்பட்ட மரங்களை, அதே வளாகத்தில் வேறு இடத்தில் மறுநடவு செய்யும் பணி தொடங்கியது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இக்கட்டிடம் அமைய உள்ள பொதுப்பணித் துறை கட்டிட வளாகத்தில் புங்கன், வேம்பு, வேப்பாலை, வில்வம் போன்ற ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நூலகக் கட்டிடம் அமைய உள்ள இடத்திலிருக்கும் 15-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் ஆலோசனையின் பேரில், இந்த மரங்களை கோவை ஓசை அமைப்பின் சையத் தலைமையில் தன்னார்வலர்கள், அதே வளாகத்தில் வேறு இடத்தில் பாரம்பரிய முறையில் மறுநடவு செய்யும் பணியை நேற்று தொடங்கினர்.

இதுகுறித்து மரங்கள் மறு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மரங்கள் மறு வாழ்வு அமைப்பின் நிறுவனரும், கோவை பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை திட்ட அலுவலர் ஓசை சையத் கூறுகையில், பொதுவாக மரங்கள் இருக்கிற பகுதிகளை கட்டிடம், சாலைகள் அமைக்க தேர்வு செய்யக்கூடாது. ஆனால், தற்போது கலைஞர் நூலகம் இந்த இடத்தில்தான் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது. அதனால், இங்கிருக்கும் 15-க்கும் மேற்பட்ட மரங்களை அருகில் உள்ள இடத்தில் மறு நடவு செய்கிறோம். இன்று (நேற்று) ஒரே ஒரு மரத்தைதான் மறு நடவு செய்தோம். விரைவில் அனைத்து மரங்களும் மறு நடவு செய்யப்படும். மரத்துக்கான உயிர் மண்ணில்தான் உள்ளது. தொலைவான தூரத்துக்கு கொண்டு சென்று நட்டடால் மரங்கள் வளராது. அதனால், இந்த வளாகத்திலேயே உள்ள காலியிடத்தில் மரங்களை மறு நடவு செய்கிறோம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x