Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

தந்தை, தாய் மற்றும் இயக்க நிர்வாகிகள் - தனது பெயரை பயன்படுத்த தடை கோரி விஜய் வழக்கு : செப்.27-ம் தேதி விசாரணை

தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னைப் பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அகில இந்தியதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முயற்சி மேற்கொண்டார். கட்சித் தலைவராக விஜய் உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாய் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இக்கட்சிப் பதிவு தவறானதகவல் என்று கடந்தாண்டு நவம்பரில் விஜய் தரப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும்மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னைநகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரலில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட 6 பேருக்குநோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு தொடர்ந்தநடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதரால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x