Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

ஆளுங்கட்சி கூட்டணியில் மோதல் - புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் திமுக களமிறங்க திட்டம்? :

ஆளுங்கட்சி கூட்டணியில் மோதல் நிலவுவதால் புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்க திமுக திட்டமிட்டு வருகிறது.

புதுவையில் மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்.4-ல் நடக்கிறது. வரும் 22-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஆளும்கட்சியான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடவே வாய்ப்பு அதிகம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாஜக தலைமையும் எம்பி சீட்டை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஐசரி கணேஷ் சந்தித்தார். அவரும் மாநிலங்களவை எம்பிக்கு போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகிஉள்ளது.

ஆளும்கட்சி கூட்டணியான என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையில் ஏற்பட்டுள்ள மோதலை பயன்படுத்தி திமுக களமிறங்க திட்டமிட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் எம்பி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். நேற்று பிற்பகலில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திமுக தலைமையின் அனுமதியுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக திமுக உயர்மட்டத்தில் விசாரித்தபோது, “புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் திமுக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புதுவை சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக, திமுக தலா 6, சுயேச்சைகள் 6, காங்கிரஸ் 2 என 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவை திமுக பெற்றால் 14 எம்எல்ஏக்கள் பலம் கிடைக்கும். ஆளும் கூட்டணியில் அதிருப்தியில் ஒரு சிலர் வாக்களிக்காவிட்டால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். இதனால் சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவை பெறவும் திமுக முயற்சித்து வருகிறது” என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கெனவே 2015-ம் ஆண்டு புதுவை மாநிலங்களவை எம்பி பதவியைப் பெற ஜெகத்ரட்சகன் முயற்சித்திருந்தார். தற்போது மீண்டும் திமுக தரப்பில் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x