Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM
பெங்களூருவில் குடும்ப பிரச்சினையில் 9 மாத குழந்தையை கொன்றுவிட்டு ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பேடரஹள்ளி அருகேயுள்ள திகளரபாளையாவை சேர்ந்தவர் கன்னட பத்திரிகையாளர் சங்கர் (52). இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு சிஞ்சனா (34), சிந்துராணி (31) ஆகிய 2 மகள்களும், மதுசாகர்(27) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சிஞ்சனாவுக்கு பிரக்ஷா என்ற 3 வயது பெண் குழந்தையும், சிந்துராணிக்கு 9 மாத ஆண் குழந்தையும் உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த வாரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 5 நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்ப வந்தபோது வீடு பூட்டிக்கிடந்தது.
ஆனால் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டது.
அப்போது படுக்கை அறையில் பாரதி, அவரது மகள்கள் சிந்துராணி, சிஞ்சனா மற்றும் மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். 9 மாத ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது. மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் பிரக்ஷா உயிருடன் இருப்பதை கண்டனர். இதையடுத்து போலீஸார் அக்குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் சவுமேந்த் முகர்ஜி கூறும்போது, “சங்கரின் பிள்ளைகளுக்கு மத்தியில் குடும்பத் தகராறு இருந்துள்ளது. சிந்துராணி தனது கணவரை பிரிந்து வாழ்வது தொடர்பாகவும் சண்டை ஏற்பட்டுள்ளது. சங்கர் வீட்டை விட்டு வெளியேறிய தினமே பாரதி தனது பிள்ளைகள் மூவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக ஆண் குழந்தையை கொன்றுள்ளனர். இறந்து சில தினங்கள் ஆனதால் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன” என்றார்.
பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT