Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி விவகாரம் - தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு : உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,கடந்த 2017 செப்.12-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியைகலைத்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிதாக 2 பதவிகள் உருவாக்கப்பட்டன.

பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக கட்சி விதிகளின்படி இவ்வாறு புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.

மேலும், பொதுச் செயலாளருக்கு உரிய அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளித்துபொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தவறு.

எனவே, இதுதொடர்பாக அதிமுக கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், தீர்மானங்களை ஏற்று தேர்தல் ஆணையம் கடந்த 2018 மே 4-ம் தேதிபிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

ஜெயலலிதா மறைவின்போது அதிமுகவில் இருந்த அதே விதிகளையே பின்பற்றுமாறு அதிமுக தலைமைக்கு உத்தரவிட தேர்தல்ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x