Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM
திருப்போரூரில் கந்தசுவாமிக்கு கோயிலுக்கு சொந்தமான, ரூ.180 கோடி மதிப்பிலான 44.75 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான 700 ஏக்கர் நிலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கந்தசுவாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் 50 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் மேற்கொண்ட தொடர் ஆய்வில், திருப்போரூர்கிராமப் பகுதியில் 44.75 ஏக்கர் நிலங்கள்பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில், கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். சுமார் ரூ.180 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT