Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM
முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கானவிண்ணப்பப் பதிவு முன்னறிவிப்பின்றி நேற்று தொடங்கியதால், தேர்வர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு 1), கணினி ஆசிரியர் (கிரேடு 1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வு கணினிவழியில் நவ.13, 14, 15-ம் தேதிகளில் நடத்தப்படும். அதற்கான இணைய விண்ணப்பப்பதிவு செப்.16 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
எனினும் அறிவித்தபடி செப்.16-ல் விண்ணப்பப்பதிவு தொடங்கவில்லை. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பப்பதிவு செப்.20-ம் தேதி தொடங்கும் என்று நேற்று முன்தினம் தேர்வு வாரியம் அறிவித்தது. இதையடுத்து தேர்வர்கள் விண்ணப்பிக்க தயாராகி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (செப்.18) தொடங்கியது. தேர்வர்கள் /trb.tn.nic.in/ என்ற இணையதளம் வழியாக வரும் அக்.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்‘‘ கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் மீண்டும் விண்ணப்பப்பதிவுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகள் தேர்வர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT