Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதி திமுக எம்எல்ஏஉதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், உதயநிதி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார். அதில், ‘உதயநிதி தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.1-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT