Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

மாநிலங்களவை எம்பி தேர்தலில் புதுச்சேரி பாஜக போட்டியிட முடிவு :

புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமியிடம் பாஜகவினர் அளித்தனர்.

புதுவை மாநிலங்களவை எம்பியாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் அக்.6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய எம்பியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக். 4-ம்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கியது.

22-ம் தேதி மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். மனுத் தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனால், பெரும்பான்மை பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ள என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இருந்து இத்தேர்தலில் போட்டியிடுவது யார் என முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இரு கட்சிகளும் மாநிலங்களவை எம்பியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன.

தமிழக பாஜகவைச் சேர்ந்த முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்ற 6 மாதத்துக்குள் எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும். அவருக்காகவும் புதுவை எம்பி பதவியை பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. என்ஆர்.காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாநிலங்களவை எம்பி பதவியைப் பெற அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம்பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம்நடந்தது. கூட்டத்தில் மாநிலங்களவை எம்பி பதவியை கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளித்தனர். என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். சுமுக உடன்பாடு ஏற்படாவிட்டால் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x