Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

பெரிய ரெய்டுகள் நடக்கின்றன, ஜாக்கிரதை : செல்லூர் கே.ராஜுவை எச்சரித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

‘ஸ்மார்ட் சிட்டி ஊழலை கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை, பெரிய ரெய்டுகள் நடக்கின்றன, ஜாக்கிரதை’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவை நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.

மதுரையில் நேற்று நடந்த ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சராக எனக்கு தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினராகத்தான் பங்கேற்றுள்ளேன். இந்தத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் நடக்காததால் மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,805 கோடியை வழங்கவில்லை. பொதுவாக வர வேண்டிய நிதியையே உள்ளாட்சித் தேர்தலை காரணம்காட்டி தர மறுக்கும் மத்திய அரசு, மேயர், கவுன்சிலர்கள் இல்லாமலே ஸ்மார்ட் சிட்டிக்கு எப்படி அனுமதி வழங்கி நிதி ஒதுக்கினார்கள்?

நேற்று நடந்த ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்கமுடியவில்லை. கடைசி நேரத்தில்அழைப்பு வந்ததோடு அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பது முன்கூட்டியே தெரியவில்லை. டெல்லியில் நடந்திருந்தால்கூட ஒரேவிமானத்தில் சென்று வந்திருக்கலாம். லக்னோவுக்கு செல்ல 3 விமானங்கள் மாற வேண்டும். அந்தக் கூட்டத்துக்காக மதுரையில் நேற்று என்னால் 15, 20 நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடியவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் விஞ்ஞானம் உலகத்துக்கே தெரியும். அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்கிறார். ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. தற்போது பெரிய ரெய்டுகளெல்லாம் நடக்கின்றன. ஜாக்கிரதை, என்று கூறினார்.

செல்லூர் ராஜு சவால்

மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்துக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்பொறுப்பான நிதி அமைச்சரிடம்இருந்து பொறுப்பில்லாத வார்த்தைகள் வருவது வரவேற்கத்தக்கது இல்லை. தற்போது நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. சட்டம்,அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள். பொத்தாம் பொதுவாக குறை சொல்லாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான். எங்களுக்கு மடியில் கனமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x