Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக தேர்தல் பிரிவுதுணைச் செயலாளருமான இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த அவசியமும் இல்லை. மொத்தமே 14, 573 வாக்குச்சாவடிகளில்தான் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்தியுள்ள நிலையில், இந்த9 மாவட்டங்களில் 2 கட்டமாக தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சி சார்பில் கள்ள ஓட்டு, முறைகேடு எனபல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகிவிடும்.
மேலும் இருகட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என்பது தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியுடன் தள்ளிவைக்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால் அது நேர்மையாகவும், ஜனநாயகரீதியாகவும் நடக்காது. இந்த 9 மாவட்டங்களிலும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடும். இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கரோனா விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்தவும் அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி கடந்த செப்.14 அன்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அதில், இதற்கு முந்தையதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்தினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்பதால் ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் அளித்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்தஉத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும், என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT