Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாட்டம் : கட்சியினர் மரியாதை

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் அதிகாரிகள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். கட்சியினர் பெரியார் சிலை, உருப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் எம்பி சு.வெங்கடேசன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

தல்லாகுளம் அவுட்போஸ்ட் அருகே பெரியார் சிலை இருந்த இடத்தில் அவரது படத்துக்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், நிர்வாகிகள் வி.வேலுச்சாமி தலைமையில் பலரும் மரியாதை செலுத்தினர். மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அவனியாபுரத்தில் பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில ச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

மதிமுக சார்பில் எம்.பூமிநாதன் எம்எல்ஏ. தலைமையில் மகபூப்ஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். நகரின் பல்வேறு பகுதிகளில் திக.வினர் மரியாதை செலுத்தினர்.

வாடிப்பட்டியில் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது. குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் திராவிடர் கழகம் சார்பிலும் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டதலைவர் சு.தனபாலன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

பெரியார் பிறந்தநாளையொட்டி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

அதிமுக சார்பில் பெரியார் படிப்பகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நகரச் செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் துரைமுருகேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

மதிமுக சார்பில் மாவட்டப் பொருளாளர் க.விநாயகமூர்த்தி தலைமையிலான கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே பாம்பூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையிலானோர் மாலை அணிவித்தனர். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவுத்தூண் அருகே பெரியார் உருவப் படத்துக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரன் தலைமையிலானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் முகமது யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். வேலுச்சாமி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வீரபாண்டி தலைமையிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநில பிரச்சாரக் குழு துணைத் தலைவர் துரைசம்பத் தலைமையிலும், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராகவன் தலைமையிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x