Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM
திருச்சி: பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது தலைமையில் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், திருச்சி சிவா எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: இக்கல்லூரி யின் 19-வது ஆண்டு முன்னாள் மாணவர் சங்கம விழா செப்.19(நாளை) அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மற்றும் பல்வேறு விருது பெற்றுள்ள முன்னாள் மாணவர்களுக்குப் பாராட்டு விழா, அதைத்தொடர்ந்து இரா.மாது குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிகழாண்டில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் வரப்பெற்ற 3-வது அரசுக் கல்லூரி இது. அதிகளவில் விண்ணப்பங்கள் வருவதால், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். பேராசிரியர் எல்.செல்லப்பா, முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.செந்தில்ராஜன், பொருளாளர் கிருஷ்ணகோபால், நிர்வாகிகள் சுரேஷ், சசி, குட்டிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT