Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் - செப்டம்பர் 20-ம் தேதி வரை தலைவராக நீடிக்க உத்தரவு : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் (என்சிஎல்ஏடி) தலைவராக இம்மாதம் 20-ம் தேதி நீதிபதி சீமா பணியில் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்ட தலைவரை 20-ம் தேதி வரை விடுப்பில் செல்ல கோரியுள்ளதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு: தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் தலைவராக இருப்பவர் அசோக் இக்பால் சிங் சீமா. இவரது பதவிக் காலம் இம்மாதம் 20-ம் தேதி வரை உள்ளது.

இந்நிலையில் என்சிஎல்ஏடி-யின் தலைவராக நீதிபதி எம். வேணுகோபாலை அரசு நியமித்தது. அவர் 11-ம் தேதி முதல் தற்காலிக தலைவராக பொறுப்புகளை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.

தனது ஓய்வுக் காலம் முடியும் முன்பாக தற்காலிக தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டது மிகவும் வினோதமானது என்று உச்ச நீதிமன்றத்தில் சீமா வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட எம். வேணுகோபாலை விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், தனது பதவிக் காலம் முடியும் வரை (செப்.20) நீதிபதி சீமா பணியில் தொடரலாம் என்றும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உத்தரவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இப்போது என்சிஎல்ஏடி தலைவராக உள்ள நீதிபதி சீமா இம்மாதம் 20-ம்தேதி வரை பணியில் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x