Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM
மேற்கு வங்கத்தில் பழங்குடியின கிராமத்தில் சாலைகளை வகுப்பறைகளாகவும் சுவர்களை கரும்பலகைகளாகவும் மாற்றி மாணவர்களுக்கு ஆசியர் ஒருவர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் பசிம் பர்தமான் மாவட்டத்தில் ஜோபா அட்பாரா என்ற பழங்குடியினர் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் 34 வயதான தீப் நாராயண் நாயக். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க முன்வந்தார். இதற்காக, கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே சிறிய அளவில் கருப்பு பெயின்ட்டால் கரும்பலகையைபோல் ஏற்படுத்தியும் சாலைகளையே வகுப்பறைகளாக மாற்றியும் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார். மாணவர்கள் அந்த கரும்பலகையில் எழுதியும் மைக்ராஸ்கோப் கருவி மூலமும் பாடங்களை ஆர்வமுடன் கற்கின்றனர். அவர்
மாணவர்களுக்கு பாடங்கள், நர்சரி பாடல்கள் மற்றும் பொது அறிவு, கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவதன் அவசியம், கைகழுவுதல் போன்றவற்றை தீப் நாராயண் நாயக் கற்றுக் கொடுக்கிறார். பள்ளிகள் மூடப்பட்டதால் படிக்காமல் சுற்றித் திரிந்த எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார் என்று நன்றியுடன் கூறுகின்றனர் கிராம மக்கள். அந்த கிராமத்தில் தீப் நாராயண் நாயக்கை ‘தெருவோர ஆசிரியர்’ என்று அன்புடன் மக்கள் அழைக்கின்றனர்.
தீப் நாராயண் நாயக் கூறுகையில், ‘‘கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்காமல் சுற்றித் திரிந்ததையும் பலர் மாடுகளை மேய்க்கச் சென்றதையும் பார்த்து கவலையடைந்தேன். எனது மாணவர்களில் பெரும்பாலோர் முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். பள்ளியில் தொடரவில்லை என்றால் ஆர்வம் குறைந்து அவர்களின் படிப்பே நின்றுவிடும் என்பதால் அவர்களுக்கு சுவர்களை கரும்பலகையாக்கி சாலைகளை வகுப்பறைகளாக்கி பாடம் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன். அவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதே எனது நோக்கம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT