Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM
கேரளாவில் பெற்றோருக்கு தெரியாமல் ஒரே அறையில் 11 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்த தம்பதி சட்டப்படி திருமணம் செய்துள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மாயமானார். குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதே பகுதியில் உள்ள காதலன் ரஹ்மான் இல்லத்தில் சஜிதா தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தது யாருக்குமே தெரியாமல் இருந்துள்ளது.
குடும்பத்தினருடன் ஏற்பட்ட கசப்புணர்வால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டில் இருந்து ரஹ்மான் வெளியேறினார். அவரை காணவில்லை என்று குடும்பத்தினர் நென்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஜூன் மாதம் ரஹ்மானின் சகோதரர் பஷீர், பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு பெண்ணோடு ரஹ்மான் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தார். அப்போதுதான் ரஹ்மானும் சஜிதாவும் 11 ஆண்டுகள் ஒரே அறையில் ரகசியமாக வாழ்ந்தது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தம்பதியாக சேர்ந்து வாழ இருவரும் விருப்பம் தெரிவித்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த சூழலில் நென்மாரா சார் பதிவாளர் அலுவலகத்தில் ரஹ்மானும் சஜிதாவும் நேற்று முன்தினம் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். நென்மாரா எம்எல்ஏ பாபு மணமக்களை நேரில் வாழ்த்தினார். இந்த திருமணத்தில் சஜிதாவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ரஹ்மான் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை.
புதுமண தம்பதி ரஹ்மான், சஜிதா கூறும்போது, "இன்றுமுதல் சட்டபூர்வமாக வாழ்க்கையை தொடங்குகிறோம். அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை பயணத்தை தொடருவோம்" என்று தெரிவித்தனர்.
எம்எல்ஏ பாபு கூறும்போது, "புதுமண தம்பதி தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது அவர்களின் கனவு. இதை நிறைவேற்ற உதவி செய்வேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT